கர்மா
ஜோதிடத்தில் கர்மாவை கண்டறிய முடியுமா என்றால் ஓரளவு நெருங்கி வர முடியும் என்பது தான் உண்மை முழுமையாக கண்டறிய இயலாது இறைவன் ஒருவனை தவிர
ஜோதிட ரீதியாக கர்மாவை கண்டறிய பூர்வ புண்ணிய ஸ்தானம் கர்மஸ்தானம் சனி பகவான் ஐந்தாம் இடத்து அதிபதி மற்றும் பத்தாமிடத்து அதிபதி இவற்றின் நிலையை வைத்து கண்டறியலாம் துணை புரிய 9 ம் மற்றும் அதன் அதிபதி
இதில் தந்தைக்கு உள்ள கர்மா பிள்ளையை பாதிக்கும் என்றோ அல்லது மூதாதையர் கர்மா வழிவரும் வாரிசுகளை பாதிக்கும் என்பதையோ ஏற்க முடியாது காரணம் ஒவ்வொரு ஆன்மாவும் அவரவர் கர்மவினை படியே பிறவி எடுக்கிறது ஒருவேளை இப்படி வேண்டுமானால் சொல்லலாம் புத்திர சோகம் ஒருவர் ஜாதகத்தில் இருக்கிறது என்றால் அவருக்கு பிறக்கும் குழந்தையின் ஜாதகத்தில் ஆயுள் பங்கம் இருக்கும் இது இறைவன் வகுத்த நியதிதானே தவிர ஒருவர் கர்மா இன்னொருவரை தாக்காது
இதற்கு இன்னொரு உதாரணம் சொல்கிறேன் ஒரு குடும்பத்தில் தகப்பனார் 60 வயது கடந்தும் நல்ல படியாக தொழில் செய்து கொண்டிருப்பார் ஆனால் அவரின் மகன் வேலை கிடைக்காமல் சுற்றிக்கொண்டு இருப்பார் முன்னோர்கள் கர்மா அந்த மகனை தாக்குகிறது என்றால் அதே பரம்பரையில் வந்த தகப்பனார் நல்ல விதமாக எப்படி தொழில் செய்ய முடியும் இங்கு ஒவ்வொருவரின் தனிப்பட்ட கர்மாவே முடிவு செய்கிறது
இப்போது எப்படி கர்மாவை கண்டறிவது என்றால் 5 ம் இடத்து அதிபதியோ அல்லது ஐந்தாம் இடமோ எந்த வகையிலும் கெட்டு போகாமல் இருக்க வேண்டும் அடுத்து கர்மஸ்தானம் என்னும் 10 ம் இடத்து அதிபதியும் 10 ம் இடமும் எந்த வகையிலும் கெட்டு போக கூடாது லக்கினாதிபதி வலுவோடு இருக்க வேண்டும் என்பது பொது விதி அடுத்து கர்ம காரகன் சனி பகவான் இவரும் நல்ல நிலையில் இருக்க வேண்டும் இதில் எத்தனை அமைப்புகள் பாதிக்க பட்டுள்ளதோ அந்த அளவுக்கு கர்மா வலுவாக செயல்படும்
இந்த மூன்று இடங்களும் கெட்டு இருந்தால் சனி தன் நிற்கும் இடத்தை பொறுத்து கர்மாவை அனுபவிக்க வைப்பார்
1 ம் இடம் எனில் தன்னை நினைத்தே நொந்து கொள்ளும் வாழ்க்கை
2 ம் இடம் என்றால் குடும்பத்தை நினைத்து
3 ம் இடம் என்றால் இளைய சகோதரர் களையும் தன்னிடம் வேலை செய்யும் நபர்களை நினைத்தும்
4 ம் இடம் எனில் தாயாரையும் அசையா சொத்துக்களை நினைத்தும்
5 ம் இடம் எனில் பிள்ளைகளை நினைத்தும் தன் அறிவால் செய்த தீமைகளை நினைத்தும்
6 ம் இடம் எனில் எதிரிகளை நினைத்தும்
7 ம் இடம் எனில் வாழ்க்கை துணையை நினைத்தும்
8 எனில் வழக்கு நோய்களை நினைத்தும்
9 ம் இடம் எனில் தந்தை மற்றும் அனுபவிக்க முடியாத பாக்கியங்களை நினைத்தும்
10 ம் இடம் எனில் செய்யும் தொழிலை நினைத்தும்
11 ம் இடம் எனில் மூத்த சகோதரர்கள் பற்றியும் தான் அடைந்த குறுக்கு வழி வெற்றிகளை நினைத்தும்
12 ம் இடம் எனில் தாம்பத்திய இன்பம் கிடைக்காமல் இருப்பதை பற்றியும் தனக்கு ஏற்படும் விரையம் பற்றியும் நொந்து கொள்ளும் படி செய்வார்
இதை வைத்து கர்மாவை தெரிந்து கொள்ள முடியும்
கர்மா என்னவென்று தெரிந்த வரை சரி இதை சரிசெய்யவே முடியாதா என்றால் முடியும் ஆனால் முழுமையாக முடியாது
உதாரணமாக 4 ம் இடம் தாயாரின் உடல்நிலை சரியில்லை என்றால் தாய் வயதில் உள்ள பெண்மணிக்கு நம்மால் முடிந்த உதவியை செய்வதன் மூலமாகவும் திங்கள் கிழமைகளில் அம்மனை வழிபட்டு வருவதன் மூலமாகவும் கர்மாவினை தாக்கத்தை குறைக்க முடியும் இங்கு சொத்தின் மூலம் வரும் துன்பத்தை போக்க அதில் ஒரு சிறு பகுதியை தானம் செய்வதன் மூலமாகவோ இல்லை அதிலிருந்து பெற்ற பலன்களை தானம் செய்வது மகாவிஷ்ணுவை வழிபடுவதினாலும் அதிலிருந்து மீள முடியும் இப்படியாக ஒவ்வொரு இடத்தை பொருத்து செய்யும் உதவிகள் மூலமாகவும் அதற்குரிய தெய்வத்தை வழிபட்டாலும் கர்மாவை குறைக்க இயலும்
சர்வம் கிரிஷ்ணார்ப்பனம்