கரணம் பற்றிய அரிய தகவல்
==========================
திதியில் பாதி கரணம். கரணம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விலங்குகளை குறிக்கும். அந்த விலங்குகளின் செயல்களை அந்த கரணத்தில் பிறந்த நபர் பிரதிபலிப்பார். அந்த விலங்குகளை உங்கள் சுபதாரைக்கு ஏற்ப பயன்படுத்தலாம். கரண அதிபதி அல்லது கரணத்திற்குரிய தெய்வம் உங்களுக்கு பாதுகாப்பு தரும்.
பவம்-சிங்கம்
பாலவம்-புலி
கௌலவம்-பன்றி/வாரஹம்
தைதுலை-கழுதை
கரசை-யானை
வணிசை-பசு/காமதேனு
பத்திரை-கோழி/சேவல்
சகுனி-காக்கை
சதுஷ்பாதம்-நாய்
நாகவம்-பாம்பு
கிம்ஸ்துக்னம்-புழு/அட்டை
உதாரணமாக கிம்ஸ்துக்ன கரணத்தில் பிறந்தால், அவர்கள் அட்டையை தன் கையில் வைத்திருக்கும் தன்வந்திரியை வணங்கலாம். ஆனால் அவர் உங்களுக்கு சுபத்தாரையாக வரவேண்டும்.
சரியான கரணநாதர்களின் விபரங்களை கீழே தந்துள்ளேன்.
பவ- செவ்வாய்.
பாலவம்- இராகு.
கௌலவம்- சனி.
தைதுலை- சுக்கிரன்.
கரசை- சந்திரன்.
வணிஜை- சூரியன்.
சகுனி- சனி.
பத்தரை- கேது.
சதுஷ்பாதம்- குரு.
நாகவம்- ராகு.
கிம்ஸ்- புதன்.
சிலநாள்களுக்கு முன்பாக அனைத்து ஜோதிடக்குழுக்களிலும் கரணநாதர்களின் விபரத்தையும் அதன் பலன்களையும் இதைபற்றி தெரிந்தவர்கள் பதிவிடுமாறு கோரியிருந்தேன். ஆனால் இதைபற்றி தெரிந்தவர்கள் குறைவு என்பதால் யாரும் பதிவிடவில்லை. தெரிந்தவர்கள் மிகவும் குறைவு. அவர்களும் வகுப்புகளில் மட்டும் நீட்டிமுழக்கி இதன் பலன்களோடு சேர்த்து உண்மைக்கு புறம்பான விபரங்களையும் கூறிவந்தனர். எனக்கு புதன் அந்தரம் நடைபெற்றதால் உண்மையான விபரங்கள் கிடைக்கும் என்று முயற்சி செய்தேன். பல சாப்ட்வேர்களில் கரணநாதர்களின் விபரம் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. உதாரணமாக வணிஜை கரணத்திற்கு அதிபதி சூரியன். ஆனால் தவறாக சுக்கிரன் என்றும் புதன் என்றும் குறிக்கப்பட்டுள்ளது. வேண்டுமென்றே சிலர் தவறான கரணநாதர் விபரங்களை முகநூல் பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.
கரணநாதர்களின் பலன் என்ன?
இவர்கள் யோகிக்கு பிறகு நமக்கு வெற்றியையும் , யோகத்தையும், தருபவர்கள்.கரணநாதன் பற்றி ஒரேவரியில் கூறுவதானால் இந்தகிரகம் கேந்திரகோணத்தில் ஆட்சி உச்சம் என்று வலிமையாக இருந்தால் ஜாதகத்திற்கு யோகம். இந்த கரணாதிபதியே ஜாதகத்திற்கு தலைவன் என்று பஞ்சாங்க நூல்கள் கூறுகின்றன. லக்னாதிபதிக்கு கரணநாதன் பகையாகாமல் இருப்பது மிகவும் நல்லது. கரணநாதனின் பகைகிரகங்கள் தசாநடத்தும்போது அக்கிரகங்கள் லக்னயோகர்களுக்கும் பகையானால் தீயபலன் அதிகம். யோகியும் கரணநாதனும் ஒருவரானால் அத்தசாக்காலம்தான் மிகவும் உயர்ந்த பொற்காலம். இவையெல்லாம் பஞ்சாங்க சூட்சுமங்கள். இவற்றை உண்மையாக யாரும் கூறமாட்டார்கள். தெரிந்தவர்களும் தேவையற்ற கதைகளையும் சேர்த்து திரித்துதான் கூறுவார்கள். அல்லது மறைத்துவிடுவார்கள். கரணநாதன் நட்சத்திரத்தில் அமர்ந்த கிரகங்களும் நல்ல பலன்களையே தரும். யோகிக்கு அடுத்து நம்மை காப்பது கரணநாதன்தான். இவற்றின் பலன்களை உங்கள் ஜாதகத்தில் ஆராய்ந்து பாருங்கள்.யோகியும்,கரணநாதனும் பார்த்த ராசிகளும் யோகமளிக்கும். இவை ஜோதிடமூலநூல்களில் கூறப்படவில்லை. பஞ்சாங்கத்தின் ஐந்து அங்கங்கள் இவை. நான் உதாரண ஜாதகங்களுடன் இவற்றை பற்றி வெளியிடுகிறேன். ஞானிகளால் உரைக்கப்பட்ட ஜோதிடத்தில் கூடுதல் பலமளிக்கும் துணைவிதிகள் இவை. ஒரு கிரகம் ஒன்றுக்கு மேற்பட்ட நிலையில் யோகமளிக்குமாறு இருந்தால் அவற்றால் கிடைக்கும் யோகத்தின் அளவும் சிறப்பாக இருக்கும். உதாரணமாக கீழ்க்கண்டவற்றில் நான்கு அல்லது ஐந்து விதிகள் தசாநாதனுக்கு பொருந்தி வந்தால் அக்காலம் யோக காலமாகவே, வளர்ச்சியாகவே இருக்கும்.
1. லக்னத்திற்கும் ராசிக்கும் நண்பர்களாகிய யோகாதிபதி லக்னத்திற்கும் ராசிக்கும் நல்ல இடங்களில் சுபர்களின் பார்வை சேர்க்கையில் இருப்பது.
2. சட்பலத்திலும் வலுத்து அத்தசாநாதன் ஆரோகண கதியில் இருப்பது.
3. இந்து லக்னத்தில் இருப்பது அல்லது பார்த்து இருப்பது.
4. யோகராகிய தசாநாதன் புஷ்கராம்சத்தில் இருப்பது.
5. யோகியாகவோ அல்லது யோகியின் நட்சத்திரத்தில் இருப்பது.
6. கரணநாதனாகவோ அல்லது கரணநாதனின் நட்சத்திரத்திலோ இருப்பது.
7. பல வர்க்க அட்டவணைகளில் சுபரின் வீடுகளில் இருப்பது.
8. கேந்திராதிபதி கோணத்திலும் கோணாதிபதி கேந்திரத்திலுமாக இருப்பது அதிலும் சுபர்கள் கோணத்திலும் பாவக்கிரகங்கள் கேந்திரத்திலுமாக இருப்பது. கேந்திரகோணாதிபதிகள் சேர்ந்திருப்பது இவற்றிற்கு இரண்டு அல்லது மூன்றுக்கும் மேம்பட்ட அமைப்புகள் உங்கள் ஜாதகத்தில் இருந்தால் அத்தசாக்காலம் யோகமாகவே இருக்கும்.
முக்கியமாக மேலே கூறியுள்ள யோகங்கள் சிறப்பாக செயல்பட லக்னமும் லக்னாதிபதியும் சுபர்களால் சுபத்துவமாக இருக்க வேண்டும்.