கடன் ( ருணம்)
————————————————————-
” கடன் பெற்றார் நெஞ்சம் போல் கலங்கினான்
இலங்கை வேந்தன்” போர்க் களத்தில் தோற்று நிராயுதபாணியாக நிற்கும் ராவணனின் துயரத்தை கடன் பெற்றவர்களுடன் கம்பர் ஒப்பிடுகிறார்.
உண்மையிலே கடன் வாங்கி, அதிலிருந்து மீள முடியாமல் தவிப்பது என்பது,அதை அனுபவிப்பவர்களுக்கே புரியும். மிகவும் துன்பமான விஷயம்தான்.
ஒரு ஜாதகத்தில் எவ்வாறு அமைப்பு இருந்தால் இந்த கடன் தொல்லை ஏற்படும் என்று பார்ப்போம்.
6 ஆம் இடத்தில் சுபக்கிரகங்கள் இருந்தால் கடன் தொல்லை ஏற்படும்.
பாவக்கிரகங்கள் இருந்தால் கடன் தொல்லை இல்லை.
சுபக்கிரகங்கள் விஷயத்தில் சுக்கிரன் இருப்பது மிக மோசமான அமைப்பு.
தீராத கடன் தொல்லையிலுள்ள பலர் ஜாதகங்களில் 6 ல் சுக்கிரன் தான்.
அடுத்ததாக குரு 6 ல் அமர்வது பாதிப்பு,
சந்திரன், புதன் அமர்வதும் பாதிப்பு தான்.
பாவக்கிரகங்கள் 6 ல் அமர்ந்தால் கடன் ஏற்படாதா என்றால், ஏற்படும் ஆனால் தீராக் கடன் ஏற்படாது.
கடனை கட்டி விடலாம்.
6 ல் பாவக்கிரகங்கள் இருப்பதில், கேது இருப்பது மட்டுமே அதிக சிறப்பு.
கடனே இல்லாத பலர் ஜாதகங்களில் 6 ல் கேதுவே உள்ளது.
(6 ஆம் அதிபதி வலுப்பெறக் கூடாது )
சரி கடன் எதனால் ஏற்படுகிறது?
1) சுக்கிரன் 6 ல்” இருந்தால், மனைவியால், கல்யாண கடன்,வீடு கட்டியதால் ஏற்பட்ட கடன்,
ஆடம்பர வாழ்க்கைக்கு கடன், இந்த காரணங்களால் கடன் ஏற்படும்.
2) குரு இருந்தால், புத்திரர்களால் கடன்,
குழந்தைகள் படிப்புக்காக வாங்கிய கடன், பைனான்ஸ் சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஏற்பட்ட கடன் ஆகும்.
3) சந்திரன் இருந்தால் தாயாரால் கடன், உடல் நிலை பாதிக்கப்பட்டு,அதற்கு வாங்கிய கடன் போன்றவை ஆகும்.
4) புதன் இருந்தால், வியாபாரத்தில் ஏற்பட்ட கடன்,மாமான் வர்க்கத்தால் கடன், கல்விக் கடன் ஆகியவை ஏற்படும்.
சரி இனி அதிபதிகளை பார்ப்போம்.
1) 10 ஆம் அதிபதி 6 ல் அமர்வது மோசமான அமைப்பு, தொழில் செய்வதற்கு வாங்கிய கடனை கட்டவே முடியாது. இவர்கள் சுயதொழில் செய்ய கூடாது.
2) 4 ஆம் அதிபதி 6 ல், அல்லது 6 ஆம் அதிபதி 4 ல் அமர்வது, வீடு, வாகனம்,சொத்து போன்றவற்றால் கடன் ஏற்படும்.
3) 2, 11 ஆம் அதிபதிகள் 6 ல் அமர்வது வரும் பணம் லாபம் எல்லாம் கடனுக்கு வட்டிக்கே போய்விடும்.
4) 9 ஆம் அதிபதி 6 ல் அமர்வதும் தரித்திர அமைப்பு தான்.
தந்தையால் கடன் ஏற்படும்.
5) 5 ஆம் அதிபதி 6 ல் அமர, பூர்வீக சொத்தால் கடன்,புத்திரர்களால் கடன் ஏற்படும்.
6) 7 ஆம் அதிபதி 6 ல் இருந்தால் மனைவியால் கடன்,கூட்டுத்தொழிலில் ஏற்பட்ட கடன், நண்பர்களால் கடன்,பங்காளிகளால் வழக்கு ஏற்பட்டு கடன் போன்றவை ஏற்படும்.
7) லக்குணாதிபதி,6 ஆம் அதிபதி சம்பந்தம் எந்த வகையில் ஏற்பட்டாலும் கடன் ஏற்படும்.
8) ஒரு ஜாதகத்தில் கடன் ஏற்பட கூடாது என்றால்
2-11 அதிபதிகள் பலம் பெற வேண்டும்.
6 ஆம் அதிபதி பலகீனம் அடையவேண்டும்.
9) 6 ஆம் அதிபதி, 8 ஆம் அதிபதி திசையில் கடன் தொல்லை ஏற்படும்.
10) குரு நீச்சம் அடைந்தாலும் கடன் ஏற்படும்.
11) சனி-செவ்வாய் சேர்க்கை பெற்று இருந்தால் கடன் ஏற்படும்.
12) 6 ஆம் வீட்டை குரு பார்த்தாலும் கடன் குறையாது
கடன் இல்லை
******
6 ஆம் அதிபதியே கூட 6 ல் அமரலாம். ஆனால் அவர் பாவியாக இருக்க வேண்டும்.
பாவிகள் 6 ல் அமர வேண்டும். தனித்தோ, சேர்க்கை பெற்றோ,
6 க்குடையவன் 8, 12 ல் அமர வேண்டும்
6 ஆம் அதிபதி நீச்சம் பெற்றால் கடன் இல்லை.
குரு,செவ்வாய் சேர்க்கை பெற்றால் கடன் இல்லை.
மேற்கண்ட வர்களுக்கு கடன் இல்லை என்றால்
கடனே வாங்க மாட்டார்கள் என்று அர்த்தம் இல்லை.
தீராக் கடன்காரர்கள் இல்லை என்று சொல்லலாம்
இதற்கு பரிகாரம்:
மைத்ர முகூர்த்தம் என்று ஒன்று உள்ளது.
அதாவது அசுவினி நட்சத்திரம் அன்று மேஷம் லக்குணம் நடைபெறும் சமயத்தில்,
அனுஷம் நட்சத்திரம் அன்று விருச்சிகம் லக்குணம் நடைபெறும் சமயத்தில் யாரிடம் கடன் பட்டு இருக்குறமோ அவர்களிடம் அசலில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் அடைப்பட்டு விடும் என்று சொல்லப்பட்டுள்ளது.
இது நடைமுறையில் சரிவருகிறதா என்றால்?
இல்லை சரிவரலை.
நான் பலருக்கு இந்த நேரத்தை குறித்து கொடுத்து உள்ளேன். அவர்கள் கடன் தீரவில்லை.
சரி வேறு என்ன பரிகாரம்,
ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் வழிபாடு ஒரளவு கடனின் தீவிரத்தை குறைத்து நன்மையை தரும்.
தேய்பிறை அஷ்டமி கால பைரவர் வழிபாடு நன்மையை தரும்.
கடன் தொல்லை முழுவதும் தீர,கடன் வரும் வழியை கண்டுப்பிடித்து அதை நிறுத்த வேண்டும்.
ஆடம்பர செலவால் கடன் என்றால், அதை குறைக்கும் வரை கடன் தீராது.
அப்புறம் பழைய திரைப்படத்தில் ஒரு வசனம் வரும்,கடன் அதிகம் இருக்கலாம்,கடன்காரங்க அதிகம் இருக்கக் கூடாது. ஏன்னா
ஒருத்தன் திருப்பி கேட்டா எல்லோரும் கேட்பாங்க…
அதாவது நமக்கு 5 லட்சம் தேவைப்பட்டால் ஒருத்தரிடம் தான் வாங்கனும்.
10 பேரிடம் வாங்க கூடாது….
கடன் வாங்காமல் நிம்மதியான வாழ்க்கை வாழ்வோம்.
” தேவதா காரிய ஸித்யாத்தம் ஸபாஸ்தம்ப ஸமுத்பவம்”
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே